Thursday, 29 October 2015

” சக்கரையம்மா என்னும் பெண் சித்தர் ” …

நமது சுதந்திரப் போராட்ட காலத்தில், சக்கரையம்மா என்ற பெண்சித்தர், வானில் பறவைபோல பறப்பதைப் பலரும் பார்த்து வியந்திருக்கிறார்கள். தமிழறிஞரான திரு.வி.க. தாம் எழுதிய “உள்ளொளி’ என்ற புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
“சென்னையில் கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். மானுடம் பறக்கிறது என்றால் விந்தையல்லவா?’
விண்ணில் பறக்கும் சக்தியுடன் திகழ்ந்தாரே, யார் இந்த சக்கரையம்மா…?
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த தேவிகாபுரம் என்ற சிற்றூரில் 1854 இல் பிறந்தாள் ஆனந்தாம்பா என்ற தெய்வீக பெண்.
அந்த ஊரில் புகழ்பெற்ற பெரியநாயகி ஆலயம் உண்டு. அந்த ஆலயத்தின் மேற்கு மூலையில், தேவியின் மூல விக்கிரகத்தை தரிசித்தவாறு, மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்திருப்பாள் சிறுமி ஆனந்தாம்பா.
ஆனந்தாம்பாவாகப் பிறந்திருப்பது யார்? அவள் இந்த உலகத்தப் பெண்ணா, இல்லை வானுலகத்துக்கு உரிமையானவளா? தேவியின் வடிவம் தானா அவள்? அந்த மூல விக்கிரகத்தில் அவள் எதை பார்க்கிறாள்? தன்னைத்தானே தரிசித்துக் கொள்கிறாளா? யார் அறிவார்?
அவளது வீடே கோயிலின் அருகில் தான் இருந்தது! அவள் தந்தை சேஷ குருக்கள் கோயில் அர்ச்சகர்களில் ஒருவர். குருக்களின் புதல்வி என்பதால் ஆலயத்திற்கு அவளால் எப்போது வேண்டுமானாலும் போக முடிந்தது. தியானத்தில் மணிக்கணக்கில் தோய்ந்திருக்கவும் முடிந்தது.
அவள் வயதுடைய சிறுமிகள் பல்லாங்குழியிலும், பாண்டியிலும் பொழுது போக்கிய காலங்களில் அவள் மட்டும் தன் நேரம் முழுவதையும் தியானத்திற்கே அர்ப்பணித்தாள்.
அக்கால வழக்கப்படி, அவளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. கணவன் சாம்பசிவம் 24 வயதுப் பையன். சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் சட்டநாத மடம் என்றொரு மடம் இருந்தது. (கோமளீஸ்வரன் பேட்டை இப்போது புதுப்பேட்டை எனப்படுகிறது). சட்டநாத மடத்தின் உரிமையாளன் அவன்தான். ஏற்கெனவே திருமணமாகி மனைவியை இழந்த அவனுக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கை பட்டாள் ஆனந்தாம்பா.
ஆனந்தாம்பாவை அவன் ஒரு வேலைக்காரிபோல் நடத்தினான்.
சட்டநாத மடத்தின் அருகில் கோமளீஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில் இருந்தது. தற்போதும் கோயில் இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அங்கே போய் சிவன் சன்னதியில் அமர்ந்துகொள்வாள் ஆனந்தாம்பா. பிறந்த வீட்டில் அவளுக்கு அடைக்கலம் தந்தவள் தேவி கோயில் பராசக்தி என்றால் புகுந்த வீட்டில் அடைக்கலம் தந்தவர் சிவபெருமான்!
பெண்பித்துப் பிடித்து பல்வேறிடங்களில் அலைந்த சட்டநாதன் பெருவியாதி பிடிக்கப்பட்டு முப்பத்தைந்தே வயதில் காலமானான். ஆனந்தாம்பாவுக்கு அப்போது வயது இருபது.
அக்கால வழக்கப்படி, அவளுக்கு முடி மழித்து முக்காடு போட்டார்கள். அழகுக் கோலம் அலங்கோலமாக மாற்றப்பட்டதை ஆனந்தாம்பா பொருட்படுத்தவில்லை. அவளுக்கு தன் உடல்பற்றிய பிரக்ஞையே இருந்ததில்லை. கணவன் காலமானது அவளைப் பொறுத்தவரை அவளின் ஆன்மிக வாழ்வுக்கு ஒரு வாய்ப்பே ஆயிற்று.
தேவிகாபுரத்தில் சிறிதுகாலம் இருந்த அவள், அதன்பின் திருவண்ணாமலை அருகே போளூரில் அண்ணன் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். ஆனந்தாம்பா சக்கரையம்மாவாக மாறிய பரிணாம வளர்ச்சி நடந்தது அங்குதான். எண்ணற்ற ஆன்மிக அனுபவங்களை அவளுக்கு வாரி வழஙகியது அவ்வூர்.
அங்கே அருகிலிருந்த நட்சத்திரக் குன்றில் நட்சத்திர குணாம்பா என்ற உயர்நிலைத் துறவினி ஒருவர் வாழ்ந்து வந்தார். நட்சத்திர குணாம்பாவைச் சந்தித்தபின் ஆனந்தாம்பாவின் வாழ்க்கையே மாறிப் போயிற்று. அவளை சிஷ்யையாக ஏற்றார். இறைச்சக்தியைத் தேவி வடிவில் மந்திர ரூபமாக வழிபடும் ஸ்ரீ சக்ர உபாசனையைக் கற்றுத் தந்தார்.
அந்த உபாசனையை மேற்கொண்டதால் தான் பின்னால் ஆனந்தாம்பா ஸ்ரீ சக்ர அம்மா என அழைக்கப்பட்டார். அதுவே பொது மக்களின் வாய்மொழியில் மருவி சக்கரையம்மா ஆயிற்று.
“நான் மீண்டும் சென்னைக்கு, என் புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டுமே? என குருவான உங்களை இனி அடிக்கடிச் சந்திப்பது எவ்விதம்?’ என்று சக்கரையம்மா உருகிக் கரைந்தபோது குணாம்பா கனிவோடு அவரைப் பார்த்தார்.
“அதுபற்றிக் கவலைப்படாதே’ என்று லகிமா என்ற ஓர் ஆன்மிக ஸித்தி அவருக்கு ஏற்படுமாறு செய்தார். லகிமா என்பது உடலை மிக லேசாக மாற்றிக் கொள்வது. அந்த ஸித்தி அடைந்தவர்களால் விண்ணில் பறக்க முடியும். “இனி எப்போது வேண்டுமானாலும் நீ பறந்துவந்து என்னைப் பார்க்கலாம்’ என அருள்புரிந்தார் குணாம்பா.
மீண்டும் சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் இருந்த தன் புகுந்த வீட்டுக்கு வந்தாள் ஆனந்தாம்பா. மொட்டை மாடி திண்ணையும் அதன் அருகே இருந்த சிறிய அறையும் அவளின் வாசஸ்தங்களாயின.
ஒருநாள் ஸ்ரீசக்ர உபாசனையில் அவள் பேரொளியால் சூழப்பட்டாள். தானே பரம் பொருளாய் ஒளிவீசுவதுபோல் தோன்றியது அவளுக்கு. அளவற்ற ஆனந்தத்தில் கடகடவென்று சிரிக்கலானாள்.
அவளது ஆன்மிக வளர்ச்சியை அறியாத புகுந்த வீட்டார், கணவன் இறந்ததால் அவளுக்குப் பித்துப் பிடித்துவிட்டதென்று கருதினர்.
அக்காலத்தில் டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ் என்ற புகழ்பெற்ற ஒரு மருத்துவர் இருந்தார். ஏழைகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்தவர். உன்னதமான ஆன்மிகவாதி அவர்.
ஒரு சமயம் ஆனந்தாம்பாவின் சகோதரருக்கு உடல்நலம் குன்றியது. மருத்துவம் பார்க்க டாக்டர் நஞ்சுண்டராவை அழைத்தார்கள்.
அவர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது மொட்டை மாடியிலிருந்து வித்தியாசமான அந்தச் சிரிப்பின் முழக்கம் கடகடவெனக் கேட்டது. ஆன்மிகவாதியான நஞ்சுண்டராவ் அந்தச் சிரிப்பால் கவரப்பட்டார்.
யார் உரத்துச் சிரிக்கிறார்கள் என்று விசாரித்தார். கணவனை இழந்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட ஆனந்தாம்பா என்ற பைத்தியத்தின் சிரிப்பு அது என்று அலட்சியமாகக் கூறினார்கள் உறவினர்கள்.
ஆனால், அந்த சிரிப்பு அவரை அழைத்ததுபோல் தோன்றியது. மாடியேறிச் சென்றார். முதுகுப் புறத்தைக் காட்டிக் கொண்ட அமர்ந்திருந்த ஆனந்தாம்பா “மகனே வா!’ என அழைத்தாள்.
தூக்கிவாரிப்போட்டது நஞ்சுண்டராவுக்கு! மனிதர்களுக்கு முதுகில் கண் உண்டா என்ன! மேற்கொண்டு எதுவும் பேசாத ஆனந்தாம்பாளிடம், தானும் எதுவும் பேசாமல் விழுந்த வணங்கிவிட்டு வந்துவிட்டார்.
பின்னொருநாள் கோமளீஸ்வரன் கோயிலுக்குச் சென்றார். ஆலய வாயிலில் அமரந்து கடகடவென்று சிரித்துக் கொண்டிருந்த ஆனந்தாம்பாவை மறுபடி தரிசித்தார். ஒளிவீசும் கண்கள். ஆனந்தாம்பாவின் மேனியிலிருந்து ஓர் அமைதி கலந்த பிரகாசம் பொங்கி வழிவதுபோல் தோன்றியது. நிச்சயம் இவர் பித்துப் பிடித்த பெண்மணி அல்ல என்பதை அவரது அவரது மருத்துவ மனம் உணர்ந்தது.
“ஏன் சிரிக்கிறீர்கள் தாயே?’ என்று பக்தி கலந்த பணிவோடு விசாரித்தார். ஆனந்தாம்பா சிரிப்பை நிறுத்திவிட்டு நஞ்சுண்டராவைப் பார்த்தார்.
“மகனே மனித உடலின் உள்ளே உறைந்திருக்கும் ஆன்மா எப்போதும் ஆனந்தம் நிறைந்தது. இன்ப துன்பங்கள் உடலுக்குத் தானே அன்றி ஆன்மாவுக்கில்லை. நீ உடல் அல்ல. நீ உடலில் உள்ளாய். அவ்வளவுதான். உனது தற்காலிகக் கூடாரமான இந்த உடலைப் பாராமல், கூடாரத்தின் உள்ளே நிரந்தர வஸ்துவாய் வசிக்கும் உன் ஆன்மாவைப் பார்! அப்படிப் பார்க்கத் தொடங்கினால் நிலையான பேரின்பத்தை நீ அடைய முடியும்.’
இந்த வார்த்தைகள் நஞ்சுண்டராவின் உள்ளத்தில் மின்னல் போல் பாய்ந்தன. சொன்ன வார்த்தைகளில் உள்ள பேருண்மை, சொன்னவர் அந்த வார்த்தைகளின் கருத்தை வாழ்வில் அனுசரித்து வாழ்கிறார் என்பதால் அந்த வார்த்தைகளுக்கு ஏற்பட்டிருந்த மந்திர சக்தி.
தன் குரு அவரே என உணர்ந்து ஆனந்தாம்பா என்கிற சக்கரையம்மாவைப் பணிந்தார் நஞ்சுண்டராவ்.
பின்னர் சக்கரையம்மா பற்றி வெளியுலகம் அறிய நஞ்சுண்டராவே காரணமானார். அடிக்கடி சக்கரையம்மாவைச் சந்தித்து உரையாடிப் பயன்பெற்று அவர் சக்கரையம்மாவின் சீடராகவே ஆனார். தம் குருவைப் பல திருத்தலங்களுக்கு நஞ்சுண்ட ராவ் அழைத்துச் சென்றார். திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி பரப்பிரும்மத்தையும் ஸ்ரீரமணரையும் சக்கரையம்மா சந்தித்தார். தன்னை ஆசிர்வதிக்குமாறு சக்கரையம்மா ரமணரிடம் கேட்டபோது ரமணர் மலர்ச்சியோடு அவர் ஏற்கெனவே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டார்.
1901இல் சக்கரையம்மா திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல விரும்பினார். நஞ்சுண்டராவ் அழைத்துச் சென்றார். அப்போது நஞ்சுண்டராவைத் தவிர இன்னும் சிலரும் அவரது சிஷ்யர்களாகியிருந்தார்கள்.
திரும்பி வரும்போது சக்கரையம்மா அந்தப் பகுதியில் அமைந்த ஓர் இடத்தை நஞ்சுண்டராவிடம் குறிப்பிட்டுக் காட்டினார். அந்த நிலத்தை வாங்கி விடுமாறும் தன் உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னபோது வருத்தத்துடன் தலையாட்டினார் நஞ்சுண்டராவ். தம் குரு தம்மை விட்டு சென்றுவிடுவார் என்பதை அந்த சிஷ்யரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. “வருந்தாதே மகனே! நான் சமாதியில் என்றென்றும் இருந்து அனைவருக்கும் அரும்புரிந்து வருவேன். என் சமாதி இருக்குமிடம் அமைதியின் கோயிலாகத் திகழும்!’ என்று சொல்லிச் சீடரை ஆறுதல் படுத்தினார் குரு.
சொன்னபடியே 1901 பிப்ரவரி 28 ஆம் நாள் சக்கரையம்மா உடல் சட்டையை உதறினார். அவரது பொன்னுடல் அவர் குறிப்பிட்ட இடத்திலேயே சமாதி செய்விக்கப்பட்டது. நஞ்சுண்டராவ், சக்கரையம்மா முன்னர் சொன்ன போதே அந்த நிலத்தை வாங்கியிருந்தாரே?
இப்போதும் சென்னையில் திருவான்மியூரில் உறவுகளைத் துறந்து துறவியான பெண் சித்தர் சக்கரையம்மா, தன் சமாதியில் நிரந்தரமாய் வாழ்ந்துவருகிறார். இறந்தது அவர் குடியிருந்த உடல்தானே? அவர் ஆன்மா தன்னை நாடிவரும் அடியவர்களுக்கெல்லாம் அருளை வாரி வழங்கி வருகிறது.

No comments:

Post a Comment