Monday, 15 February 2016

மவுனகுரு நிர்வாணசுவாமிகள்

கசவனம் பட்டி -"மவுனகுரு நிர்வாணசுவாமிகள்' 

யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்ததன் காரணமாக விநாயக பெருமானின் பெயரை கொண்டு ""கஜவனம் பட்டி"" என விளங்கிய ஊர் தற்போது கசவனம் பட்டி என்று அழைக்கப் படுகிறது..

பல ஆண்டுகளுக்கு முன், 12 வயது சிறுவன் ஒருவன் இப்பகுதிக்கு வந்தான். ஆடை ஏதும் அணியாமல், நிர்வாணமாகவே இப்பகுதிகளில் சுற்றித் திரிந்தான். முதலில் சிறுவன்தானே, என கருதிய மக்கள் அவனைக் கண்டுகொள்ளவில்லை. நாளடைவில் அவன், ஆடையே அணியாமல் எப்போதும் நிர்வாணமாகவே ஊருக்குள் வந்தான். இதைக்கண்ட சிலர், அவனுக்கு ஆடைகளை அணிவித்துப் பார்த்தனர். ஆனால், அவன் அதை கிழித்து எறிந்து விட்டான். இந்த உலகம் மாயை என்னும் போலியான ஆசைகளால் நிறைந்தது. இதில், அனுபவிக்க ஏதுமில்லை. இதைப் புரிந்து கொண்டாலே ஞானம் கிடைத்து விடும். இதை, தனது உருவத்திலேயே உணர்த்தியதால், போகப்போக மக்கள் மரியாதை கொடுத்து நடத்தினர். அவரது பெயர் தெரியாமல் முதலில் பெருமாள் சாமி என அழைத்தனர். எப்போதும் நிர்வாணமாகவே இருந்ததால், ஒருகட்டத்தில் நிர்வாணசுவாமி என்றே அழைத்தனர். அவர் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்ததால் பிற்காலத்தில் இவர் "மவுனகுரு நிர்வாணசுவாமிகள்' என அழைக்கப்பெற்றார். தன்னிடம் உபதேசம் பெற வந்தவர்களிடம்கூட, அவர் அதிகம் பேசியதில்லை. இங்கேயே முக்தியடைந்த இவருக்கு, சமாதிப்படுத்திய இடத்தில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

இத்தலத்திற்கு அருகில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்குதான் நிர்வாண சுவாமிகள் தங்கியிருந்தார். இவரது உயிர் பிரிந்ததும் இங்குதான். இக்கோயிலில் அவர் பயன்படுத்திய கட்டில் உள்ளது.

பிரதான சன்னதியில் அதிஷ்டானம் செய்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்புறம் நிர்வாண நிலையில் ஜோதி மவுனகுருசுவாமிகள் அமர்ந்திருக்கிறார். இவருக்கான மற்றொரு உற்சவர் சிலையும் இங்குள்ளது. பிரதோஷ பூஜையின்போது இவர் கோயிலை வலம் வருவார் ..

No comments:

Post a Comment