Tuesday, 22 September 2015

வெறுக்கத்தக்க சில மனிதர்கள்

வெறுக்கத்தக்க சில மனிதர்கள் உள்ளார்கள், மற்றவர்கள் பார்த்து அஞ்சத்தக்க மனிதர்கள் உள்ளனர், அவர்கள் யார் என்பதை நாம் அறியவேண்டும், அத்தகைய மனிதர்களிடம் நாம் எப்போதும் கொஞ்சம் பாதுகாப்புடனேயே நடந்து கொள்ள வேண்டும். அம மனிதர்கள் யார் என்று பட்டினத்தார் சொல்கிறார், அனைவருக்கும் புரியும் விதமாக மிகத்தெளிவாக அம்மனிதர்கள் பற்றி சொல்கிறார்.

வீண் வாதத்துக்கும் வீண் சண்டைக்கும் போவார்கள், வாதுக்கு வரமாட்டோம் என்றாலும், சண்டைக்கு வரமாட்டோம், என்றாலும், விடமாட்டார்கள் , வலிய இழுப்பார்கள்.

நன்மைக்கு உதவி செய்யார், தீமை என்றால் அதற்கு உதவ தயங்கமாட்டார். தினந்தோறும், துன்பப்பட்டு வஞ்சகம் செய்து பணம் சேர்ப்பார், அந்தப் பணத்தை தான் விரும்பும் ஒரு பெண்ணுக்கு கொடுத்து அவள் ஆசையிலே மயங்கிக் கிடப்பர். அதாவது தான் சாகும் வரை இப்படியே நாளைப் போக்குவர். இப்படிப் பட்ட மனிதர்கள் இவ்வுலகில் ஏன் பிறந்தார்கள், இறைவனே என்று பாடுகிறார்.

"வாதுக்குச் சண்டைக்குப் போவார்;
. . வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார்,
. . தினந் தேடி ஒன்றும்
மாதுக் களித்து மயங்கிடுவார்
. . விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா!
. . கச்சி ஏகம்பனே!"

சிலமனிதர்கள் உண்மை என்பதையே பேசி அறிய மாட்டார்கள், நல்லவர்களை ஒருநாளும் போற்ற மாட்டார்கள். நல்லோரை நிந்திப்பதையே கொள்கையை இருப்பார்கள். வசை பாடுவதற்கு இன்னார் என்று பாராமல் தன்னைப் பெற்று வளர்த்த தாயையே திட்டுவார்கள், வணங்க வேண்டிய தாயையே பழித்துப் பேசும் இவர்கள் பயங்கரமானவர்களே. நல்ல செயல்களைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள். மற்றவர்களை எந்த வம்பில் மாட்டி விடலாம் என்று சதா சித்தி திட்டம் போடுவார்கள். தமக்காக உளைத்தவர்களுக்குக் கூட உபகாரம் செய்யாத இவர்கள் இருப்பதால் எவருக்கும் லாபமில்லை, இவர்கள் இறந்தாலும் நட்டமில்லை என்கிறார் பட்டினத்தார்.

ஓயாமல் பொய் சொல்வர், நல்லோரை
. . நிந்திப்பர்; உற்றுப்பெற்ற
தாயாரை வைவர்; சதி ஆயிரம்
. . செய்வர்; சாத்திரங்கள்
ஆயார்; பிறர்க்கு உபகாரம் செய்யார்;
. . தமைஅண் டினார்க்கு ஒன்று
ஈயார், இருந்தென்ன? போய் என்ன?
. . காண்! கச்சி ஏகம்பனே!

ஆகவே , இவ்வாறான மனிதர்களிடமிருந்து விலகி, மனித சமுதாயத்திற்கு உதவும் உத்தமர்களா வாழுங்கள், பண்புள்ள மனிதர்களாக வாழுங்கள்! என்கிறார் பட்டினத்தார்.

No comments:

Post a Comment