Wednesday, 25 July 2018

அகத்தியர்க்கு உகந்தசீடர் தேரையர் ஜீவசமாதி - தோரணமலை :


" தோரணமலை ஸ்ரீ முருகன் திருக்கோவில் வரலாறு "

     தோரணமலை -  தென்றல் தவழும் தென்பொதிகை மலைத் தொடரில் திருநெல்வேலி மாவட்டத்தில்,  தென்காசி-கடையம் பாதையின் மேற்கில் யானை வடிவமாய் அமைந்துள்ளது . 1000 வருடங்களுக்கு முன்பு தேரையரின்  மருத்துவமனையாக விளங்கிய இந்த தோரணமலை நாளடைவில் தூர்ந்துவிட்டது .இங்கு முருகனுக்கு அமைக்கப் படிருந்த கோயிலும் காணாமல்போய்விட்டது.

   பின்பு அடியார் ஒருவர் கனவில் வேல் ஏந்திய சிறுவன் தோன்றி மலை மேல் உள்ள சுனையில் தான் கிடப்பதாகவும் தன்னை வணங்குமாறும் சொல்ல .முருகபெருமானை வணங்கி சுனையில் தேடியபோது அங்கே முருகன் சிலை கிடைத்தது .. அதனை குகைக்கு முன்பு  (தற்போது உள்ள இடத்தில்) வைத்து வணங்க ஆரம்பித்தனர்.  இன்று வரை அந்த சிலையே மூலவராக வணங்கப்படுகிறது.

     தோரணமலைக்கு தென்புறம் மலையில் இருந்து பாய்ந்து வருகிறது ராமநதி, மலையின் வடபுறம் ஜம்பு நதி தவழ்ந்து வருகிறது.இந்த இரு நதிகளுக்கு இடையேதான் தோரணமலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இரு நதிகளுக்கிடையே ஒரு கோவில் இருந்தால் அது சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும்.. அந்த வகையில் தோரணமலையும் தனிச்சிறப்பு பெற்றது.

   அபூர்வ மூலிகைகளுடன், பக்தி மணம் கமழும் தோரணமலையில் 64 சுனைகள் உள்ளன. இவை அனைத்தும் நோய் தீர்க்கும் அரும்பெரும் சுனையாகும். இந்த சுனைகள் அருகே   சித்தர்கள் தற்போதும் தங்கி தவம் புரியும் இடமாக கருதப்படுகிறது ..கடையத்து மருமகனான பாரதியார் கடையத்தில் வாழ்ந்த போது, தோரணமலை முருகனை ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று பாடி பரவசம் அடைந்தார்.

      
    தோரணமலையில் முருகப்பெருமானை வழிபட்டு சித்த மருத்துவ ஆராய்ச்சி செய்து வந்த  தேரையர் சுமார் 700 ஆண்டு காலம் தோரணமலையில் தவமிருந்து இறுதியில் அங்கேயே ஜீவசமாதி ஆகிவிட்டார்.. தற்போது மூலவராக வணங்கப்படும் முருகபெருமானின் பின்புறம் தான் தேரையர் சமாதியாகும்.. படத்தை பாருங்கள் . மூல ஸ்தானத்தில் அமர்ந்து தவம் செய்ய அருமையான அனுபவங்களை பெறலாம் ..

   மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சன்னிதியில் பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்கும் முன் இவரை வணங்கிச் செல்வது நலம் பயக்கும். உச்சியை அடைய 926 படிகட்டுகள் ஏற வேண்டும். ஒரு காலத்தில் இந்த படிகட்டுகள் கிடையாது பாறையில் பெரும்விரலை மட்டும் ஊனும்படி ஓட்டை வடித்து வைத்திருப்பார்கள் அதன் வழியாகத் தான் ஏற வேண்டும்.ஆனால் தற்போது  படிக்கட்டு வழியாக ஏறிச்செல்லலாம்.

    தோரணமலை படிக்கட்டுகளை ஏறிச் செல்வது இந்த பிறவியில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் கடந்து விட்டதை உணர்த்துகிறது. வழியில் சுயம்பாக அமைந்த சிவபெருமானை தரிசிக்கலாம்.இந்த இடங்கள் எல்லாம் நல்லசுவாச காற்றும், அருமையான நறுமணம் தரும் மூலிகை காற்றும் நமது உடல் பிணியை போக்கும் வண்ணம் நம்மை தொட்டு செல்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை அழகையும் அதில் தவழ்ந்து வரும் மேகக்கூட்டங்களையும், ரசித்துக்கொண்டே உச்சியை அடையலாம்.

   முருகப்பெருமானின் இடதுபுறம் சற்று உயரமான இடத்தில் இருக்கும் சுனையில் இருந்து தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்துக்கு தண்ணீர் எடுத்துவரப்படுகிறது. மலை உச்சியில் பெரும் பாறைக்கு இடையில் இப்படி ஊற்று பொங்கி வருவதும், கடும் கோடையிலும் இது வற்றாமல் இருப்பது இறையருள் மட்டுமின்றி ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். மலை மீது ஏறி இதில் குளிப்பது ஆனந்தமாக இருப்பதோடு அருளும் கிடைப்பதை நம்மால்  உணர முடிகிறது .

    முருகப்பெருமானின் வலதுபுறம்பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு துவாரம் ஒன்று உள்ளது. அது சாதாரண துவாரம் அல்ல அதுவும் ஒரு சுனை தான் .அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் உள்ளது. அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதியும் உள்ளது.

  ஓங்கி உயர்ந்த மலை, அடிவாரம் தொடங்கி மலை உச்சி வரை ஆங்காங்கே சுனைகள், அடிவாரத்தில் சப்த கன்னிகையர் கோவில், மலையின் பின்புறம் சாஸ்தா கோவில், மலை உச்சியில் முருகன் கோவில் என ஆன்மீகப்பிரியர்களுக்கு தோரனமலை நிச்சயம் ஆனந்தத்தைத்தரும்! ஒருமுறை வந்து பாருங்கள் ..

    அகத்தியர்க்கு உகந்த சீடர் தேரையர் :
       
  அகத்தியருடைய மாணாக்கர்களில் ஒருவராக விளங்கியவர் தேரையர் ஆவார். இவர் மருத்துவ ஞானம் மிகுந்தவர். சித்த வைத்திய முறையில் தேரையர் கண்ட உண்மைகள் பெரிதும் உபயோகமாக உள்ளது . மனிதரின் தேக உணர்வையும், குரலின் தன்மையையும் வைத்தே நோய் நிர்ணயம் செய்து விடும் திறமை பெற்றவர். அவ்வண்ணமே சிகிச்சை முறைகளிலும் இவருக்கு அதிக வல்லமை இருந்தது. இவர் பதினாறு நூல்கள் இயற்றியுள்ளார்.

    தேரையர்  சித்தர்களின் கூட்டத்தில் மிகவும் தனித்துத் தெரியும் ஒருவராவார். தேரையர் என்பது, காரணப் பெயர். உண்மையில் இவரது இயற்பெயர்  ராமதேவன் என்கிறது  அபிதான சிந்தாமணி. அகத்தியர்க்கு முன்பு தர்மசௌமினி எனும் முனிவர்தான் ராமதேவனின் ஞானகுருவாக  இருந்தார் .  தர்மசௌமினி குறுகிய காலத்திலேயே ராமதேவன் ஒரு சித்தயோகி  என்பதையறிந்து, தன்னிடம் இருந்தால் காலம்தான் வீணாகும் என்பதை உணர்ந்து கொண்டுவிட்டார். காரணம், தர்மசௌமினியிடம் ராமதேவர்  கேட்ட கேள்விகள், அவரை திணறடித்துவிட்டன. ‘‘ராமதேவா.... உனக்கான பதிலை அகத்திய முனிவரால்தான் தரமுடியும். அவர் ஒருவர் தான் முனிவருக்கு முனிவர்_சித்தருக்கு சித்தர்’’ என்று தர்மசௌமினி, ராமதேவனுக்கு வழிகாட்ட, ராமதேவனும் அகத்தியரின் பாதங்களில் போய் விழுந்து மாணாக்கராய் ஏற்றுக்கொள்ளச் செய்கிறார் .

   ராமதேவன், அகத்தியரின் வைத்திய ஞானம் முழுவதையும் ஈடுபாட்டுடன் கற்றுத் தெளிந்து விட்டார். சொல்லப் போனால், அவர் குருவை வெல்லும் ஒரு சிஷ்யன் என்கிற அளவிற்குத் தேறிவிட்டார். இப்படித் தேறியதாலேயே காலமும் இவரை தேரையர் ஆக்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அளித்தது. 

    காசி மன்னன் தலைவலியால் அவதிப் பட்டுக் கொண்டிருந்த போது அகத்தியர் அங்கு வர அவரிடம் தன் வேதனையைக் கூறியவன் அதை நீக்க வேண்டினான். அகத்தியர் நீ தூங்கும்போது ஒரு தேரைக்குஞ்சு உன் மூக்கு வலியாக உள்ளே சென்று மூளைப்பகுதியை அடைந்ததுதான் காரணம். இருந்தாலும் கவலைப்படாதே அதை நான் சரிசெய்கிறேன் என்றார் அகத்தியர். மன்னனை மயக்க நிலையில் ஆழ்த்தி சிகிச்சை தொடங்கப்பட்டது. சில நொடிகளில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. அங்கு தேரை இருந்தது. அதை எப்படி எடுப்பது என்று நினைத்தபோது ராமதேவர்  தண்ணீரை தேரையின் கண்ணில் படுமாறு வைக்க அது குதித்தோடியது. அகத்தியர் சந்தானகரணி எனும் மூலிகையினால் மன்னனின் மண்டை ஓட்டை மீண்டும் பழையபடி மூடினார். ராமத்தேவரை கட்டித்தழுவி பாராட்டினார். இந்த நிகழ்வுக்குப்பின் ராமத்தேவர்  தேரையர் என்றழைக்கப்பட்டார்.

   சித்தர் இராமதேவர்தான் ஒரு ஊமை பிராமணனாக பிறந்து ஔவையார் மூலம்  அகத்தியரிடம் அழைத்துவர அகத்தியர் அச்சிறுவனை தன்னுடைய மாணாக்கனாக ஏற்றுக்கொண்டார். பின்பு அச்சிடனுக்கு  தனக்குத்  தெரிந்த சித்திகளையெல்லாம் போதித்தார். அவருடைய ஊமைத் தன்மையைப் போக்கினார். அப்போது தொல்காப்பியம் என்ற நூலை எழுதி தொல்காப்பியர் ஆனார். என்றெல்லாம் சொல்லப்படுகிறது .

   மதுரை பண்டியனின் கூன்முதுகை தாம் சரி செய்வதாகக் கூறி தன் சீடர்களிடம் சில மூலிகைகளைக் கொண்டுவரச் சொல்லி அவற்றை இடித்து சாறு பிழிந்து ஓர் பாத்திரத்தில் உற்றி கொதிக்க வைத்தார். அப்போது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே தேரையரிடம் அடுப்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிச் சென்றார்.கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவிபட்டு ஆசிரமத்தின் மேல் கூரையிலிருந்த ஓர் வளைந்த மூங்கில் நிமிர்ந்ததைக் கண்ட தேரையர்  மூலிகைச் சாற்றை அடுப்பிலிருந்து இறக்க, பின்பு அங்கு வந்த அகத்தியரிடம் மூங்கில் நிமிர்ததைக் காட்டி தான் இறக்கி வைத்ததை  கூற தேரையரை  பாராட்டினார் அகத்தியர். அந்த மூலிகைத் தைலத்தால் மன்னரின் முதுகு கூன் நிமிர்ந்தது.

   ஒருமுறை  வயிற்றுவலி ஒருவருக்கு  ஏற்பட அகத்தியர் மருந்து கொடுத்தார், சரியாகவில்லை. தேரையரை அழைத்து வைத்தியம் செய்யச் சொன்னார். தேரையர்  பார்த்து ஒரு கடுக்காய் குச்சியை எடுத்து வாய் வழியாக உள்ளே செலுத்தி அதன் துளைவழி மருந்தை செலுத்தி வயிற்றுவலியை சரி செய்தார். அகத்தியர் கொடுத்த மருந்து வேலை செய்யாததற்கு காரணம்  வாயின் பற்களில் உள்ள விஷத்தன்மையே என்பதை அறிந்து தேரையர் மருந்து அவ்வாறு கொடுத்தார் என்பதை அகத்தியர் உணர்ந்தார். தேரையரின் திறமையை வெளி உலகுக்குத் தெரியப்படுத்த அவரை அழைத்து விருப்பமான இடங்களுக்குச் சென்று மக்களுக்கு நன்மை செய்ய பணித்தார்.

   தேரையர்  அணமயம் என்ற காட்டுப்பகுதியில் தவம் செய்து அங்குள்ள அடியவர்களின் பிணியை நீக்கி வந்தார் . அச்சமயத்தில் அகத்தியருக்கு கண்பார்வை குறைந்து கொண்டு வந்தது. சீடர்களுக்கு தேரையரின் நினைவு வர அகத்தியரிடம் அனுமதி வாங்கிச் சென்றனர். அகத்தியர் புளியமரத்தடி நிழலில் உறங்கிச் செல்க என்றார். வெகு நாட்களுக்குப்பின் அணமயம் காட்டை அடைந்த சீடர்கள் தேரையரை சந்தித்தனர். விபரம் அறிந்தார். சீடர்கள் இரத்த வாந்தி எடுக்க தேரையர் அவர்களை வேப்பமரத்தடியில் தூங்கி செல்லுமாறும் தான் இரண்டு நாளில் வருவதாகவும் சொன்னார். திரும்பவந்த சீடர்கள் உடல் நலத்துடன் இருப்பதை அறிந்த அகத்தியர் இது தேரையரின் வைத்தியம் என்பதை உணர்ந்தார். தேரையர் வந்தார். அகத்தியரின் கண்ணை பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து சரி செய்தார்.

ஒருநாள் அகத்தியர் தேரையரை அழைத்து “தேரையா, எனக்கு கண்வெடிச்சான் மூலிகை வேண்டும்” என்றார். கண்வெடிச்சான் மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறித்தவன் கண்கள் பறிபோய்விடும், யாரும் தப்ப முடியாது. ஆனால் தேரையர் தயங்காமல் இதோ கொண்டுவருகிறேன் என்று காட்டுக்குள் சென்றார். மூலிகையைக் கண்டார். ஆனால் அதனைப் பறிக்காமல் அங்கேயே அமர்ந்து கண்களை மூடி தேவியை தியானம் செய்தார். “கவலைப்படாதே தேரையா! மூலிகையை நான் பறித்துத் தருகிறேன்” என்ற குரல் கேட்டு விழித்த தேரையரின் முன் கண்வெடிச்சான் மூலிகை இருந்தது.  தேவிக்கு நன்றி கூறிவிட்டு, அகத்தியரிடம் மூலிகையைக் கொடுத்தார். அகத்தியர் மிகவும் மகிழ்ந்து, “நான் வைத்த எல்லா சோதனைகளிலும் நீ தேறிவிட்டாய். நீ அறிந்த மூலிகைகளைப் பற்றி ஒரு நூல் எழுது” என்றார். குருவின் கட்டளைப்படி அவரின் ஆசிகளுடன் ‘தேரையர் குலைபாடம்’ என்ற நூலை இயற்றினார். நெடுங்காலம் மருத்துவ சேவை செய்த தேரையர் பொதிகை சார்ந்த தோரண மலையில்  தவம் செய்து அங்கேயே ஜீவ சமாதியடைந்தார்.

ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள்.


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடைசி லிங்கமாகிய ஈசான்ய லிங்கத்தின் அருகே ஜீவசமாதி அமைந்துள்ளது. ஞான தேசிகர் மடம் என்று அழைப்பர்.காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை மற்றும் மாலை 3.00 மணி முதல் 6.00 மணிவரை நடை திறந்திருக்கும். கடந்த ஒரு வருடகாலமாக மஹான் முக்குபொடி சித்தர் இங்குதான் தங்கி இருந்தார்.

ஒருமுறை ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள் இங்கு தவம் செய்துகொண்டிருந்தார்.  தவத்திலிருக்கும் இவர் முன்னே ஒரு பெண்மணி நித்தமும் ஒரு பித்தளை செம்பு நிறைய பால் கொண்டுவந்து வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.  ஒரு நாள் சுவாமி அந்த பாலில் பாதியை குடித்து மீதியை அந்த பெண்மணியிடம் கொடுத்து "இந்த பாலை ஏதாவது ஒரு இடத்தில் ஊற்றி தோண்டிப்பார் என்றார்.
அந்தப்பெண்மணியும் அப்படியே செய்ய பொற்காசுகள் கொண்ட புதையல் கிடைத்ததாம். அப்பெண்மணி பலரிடம் சொல்லக்கேட்டு ஊரே பால் செம்புடன் சுவாமியிடம் தவம் செய்ய விடாது தொந்தரவு செய்தனர். இது நித்தமும் தொடர சுவாமி அண்ணாமலையாரை நோக்கி "என் சித்துவேலை எனக்கே வலையாகி விட்டது.  என்னை காப்பாற்றுங்கள்" என வேண்டினார்.
அன்றிலிருந்து அவர் கண்மூடி தவம் செய்யும் வேளையில் அவரை யாரும் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் அவர் கண்திறந்தால் அருகில் வந்துவிடுவர். என்ன நடக்கிறதென்று சுவாமிக்கு தெரியாது மீண்டும் அண்ணாமலையாரை வேண்ட சுவாமிக்கு  காட்சி தெரிகின்றது.  எப்பொழுதெல்லாம் இவர் கண்மூடி அண்ணாமலையாரை நோக்கி தவம் இயற்றுகிறாரோ அப்பொழுதெல்லாம் இவரது இரு புறமும் இரு புலிகள் வந்துவிடுகிறது. மக்கள் நெருங்குவதில்லை. கண் திறந்தவுடன் புலிகள் மறைந்துவிடுகிறது. மக்கள் நெருங்கிவருகின்றனர். அந்த இரு புலிகள் வேறு யாரும் அல்ல.  ஸ்ரீ அண்ணாமலையாரும் ஸ்ரீ உண்ணாமுலை தாயாரும் காவலாக நின்று முக்திக்கு வழி செய்தனர். இப்படிப்பட்ட ஒரு சித்தரின் ஆற்றலை பெற கிரிவலம் செய்யும் ஒவ்வொருவரும் இந்த நினைப்புடன் இவரது ஜீவசமாதியில் தரிசனம் செய்வோம்.

காகபுஜண்டர்

சித்தர்களில் முதன்மையானவர்கள் 18 பேர்களாக இருந்தாலும்,சித்தர்களின் எண்ணிக்கை எண்ணிலாக் கோடி .

அகத்தியருக்கும் முற்பட்ட சித்தர் ஒருவர் இருக்கிறார் எனில்,அவர் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆவார்.

பல கல்பகோடியுகங்களாக இமயமலையில் வசித்து வந்த இவரை தமிழ்நாட்டுக்கு வர வைத்தவர்கள் சித்தர்களே!
இவர் இன்றைய மதுரையை ஒட்டியுள்ள திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் வெகுகாலமாக தவம் செய்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் ஏராளமான மகான்களின் ஜீவசமாதிகள் ஆத்மத்துடிப்புடன் இயங்கிவருகின்றன.

இன்னும் பல மகான்களின் நடமாட்டம் இன்றும்,என்றும் இருக்கிறது

இவரது அருளால் உயர்ந்த சிவநிலையை எட்டியவர்கள். ஏராளம். சூட்டுக்கோல் சுவாமிகள் அவர்களில் ஒருவர்.

திருப்பரங்குன்றம் தியாகராஜ பொறியியல் கல்லூரிக்கு அருகில், சூட்டுக்கோல்மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி ஒரு விநாயகர் சன்னதிக்கு கீழே அமைந்திருக்கிறது;இந்த விநாயகரை ஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் பல யுகங்களாக வழிபட்டு வந்திருக்கிறார்.

ஸ்ரீகாக புஜண்டர் சித்தரின் அருளாசியைப் பெற ஒவ்வொரு மாதமும் வரும் ஆயில்யம் நட்சத்திர நாளில் இங்கே வருகை தந்து சூட்டுக்கோல் மாயாண்டுசுவாமிகளின் ஜீவசமாதி அல்லது அவர் பல ஆண்டுகளாக தியானம் செய்த குகையில் ஒரு மணி நேரம் வரை சிவமந்திரம் ஜபித்து வர வேண்டும்.

பூர்வ புண்ணியம் உள்ளவர்கள் ஆயில்யம் நிற்கும் நாளில் இங்கே இரவில் தங்கி,தூங்காமல், ஒரு இரவு  முழுவதும் சிவமந்திரம் ஜபித்து வரலாம்.

இவ்வாறு மாதம் ஒரு நாள் வீதம் விடாமல் ஜபித்துவர அவரவர் பூர்வஜன்ம மனவலிமைப்படி ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் அருளாசி, கிட்டும்.

ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் அவதார நட்சத்திரம் பங்குனி மாத ஆயில்யம் நட்சத்திரம்.

மதுரையைத் தவிர,தமிழ்நாட்டில் வேறு சில இடங்களில் ஸ்ரீகாகபுஜண்டரின் சித்தவாசம் இருந்திருக்கிறது.அந்த இடங்களிலும் இதே போல முயற்சி செய்து பார்க்கலாம்.

1.சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் வட்டத்தில் இருக்கும் ஆச்சாள்புரம்.இங்கே திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் நடந்திருக்கிறது.இங்கே இன்னும் ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.

2.கடலூர் மாவட்டம் சிதம்பரம் டூ கடலூர் மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் ஆலப்பாக்கத்தில் ஸ்ரீபுஜண்டலிங்கேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.இங்கே பலருக்கு ஞான உபதேசம் அளித்திருக்கிறார்.

3.காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி நெடுஞ்சாலையில் மாங்கல் கூட்ரோட்டிலிருந்து புதுப்பாளையம் செல்லும் பாதையில் சோதியம்பாக்கம் இருக்கிறது.இங்கே சிவாகமவிதிப்படி ஸ்ரீகாகபுஜண்டரின் ஆலயம் அமைந்திருக்கிறது.

4.விழுப்புரம் அருகில் சின்னச்சேலம் அருகில் இருக்கும் ஊர் தென்பொன்பரப்பி.இங்கு காகபுஜண்டர் கோவில் இருக்கிறது.

ஜீவசமாதியடையாத ஒரே சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் தான்.

5.நாகப்பட்டிணம் மாநகரத்திலிருந்து சுனாமிப் பாலம் வழியாகச் சென்றால் வருவது கோரக்க சித்தரின் ஜீவசமாதி ஆகும்.

இங்கிருந்து வேளாண்கன்னிக்குச் செல்லும் பாதையில் சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்குப் பயணித்தால் சாலையின் மேற்கே ரயில்வே கேட் தாண்டித் தெரிவது ஸ்ரீபால்மொழி அம்மன்கோவில் ஆகும்.இங்கே ஸ்ரீகாகபுஜண்டர் பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக(யுகங்களா) தவம் செய்திருக்கிறார்.

இங்கே தான் உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் படைத்த ஆதி பரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி என்ற வாலைப்பெண்ணைத் தரிசித்தார் ஸ்ரீகாகபுஜண்டர்.

6.ராஜபாளையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில், 20 கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது திருவழுக்குப்பாறை, ஆகும்.

வனத்துறை அனுமதியோடு மலை மேலே பத்து கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்.இங்கே அமுதகலசத்துடன் வாலைத் தெய்வம் அருள்புரிந்து வருகிறார்.இங்கேயும் ஸ்ரீகாகபுஜண்டர் பல காலமாக தவம் செய்திருக்கிறார்.

7.திருப்பரங்குன்றம்மலைக்குப் பெயரே புசுண்டர் மலையே.இங்கே ஏராளமான சித்தர்கள் துறவிகளின் ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.

இங்கேயும் பல காலமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.

8.நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது.இங்கே மனிதகாலடித் தடம் படாத இடங்கள் இருக்கின்றன.

இந்த வனத்தினுள் காகபுஜண்டர் குகை இருக்கிறது.(பொழுதுபோக்காகச் செல்ல முயற்சி செய்ய வேண்டாம்;விபரீத விளைவுகள் உண்டாகும்.ஜாக்கிரதை!!)

9.இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் உத்திரகோசமங்கையில் அமைந்திருக்கும் சிவாலயத்தில் ஸ்ரீகாகபுஜண்டர் பலகாலம் தவமிருந்து ஜோதி வடிவாக சிவனுடன் ஐக்கியமாகியிருக்கிறார்.

10.புதுவை மாநிலம் காரைக்கால் அருகில் இருக்கும் திருமலைராயன் பட்டிணத்தில் இருக்கும் ஆயிரங்காளியம்மன் கோவிலில் பல யுகங்களாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்திருக்கிறார்.

11.சிவகெங்கை மாவட்டத்தில் இருக்கும் திருப்பத்தூர்.இவ்வூருக்கு அருகில் இருக்கும் வைரவன்பட்டி.பூமி படைக்கப்பட்டதிலிருந்து ஸ்ரீகாலபைரவர் இங்கே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவராக அருள்பாலித்து வருகிறார்.இங்கே தவம் செய்யாத சித்தர்களே கிடையாது.ஸ்ரீகாகபுஜண்டரின் தவ ஆற்றல் இன்னும்  இங்கே பரவிக்கிடக்கிறது.

12.அண்ணாமலைக்கு அருகில் காஞ்சி (காஞ்சிபுரம் அல்ல) செல்லும் வழியில் 13 வது கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது காகா ஆஸ்ரமம்.ஸ்ரீகொல்லிமலைச் சித்தர் காகபுஜண்டரின் சீடர் தருமலிங்கசுவாமிகளின் ஆசிரமம் இது.இங்கே காகபுஜண்டரின் ஆலயம் மிக அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது.

13.கோயம்புத்தூரில் இருக்கும் மாஸ்திக்கவுண்டன்பதி என்ற ஊரில் பாலரிஷி ஆஸ்ரமம், அமைந்திருக்கிறது.இங்கே ஸ்ரீகாகபுஜண்டரை உபாசனை செய்யும் பெண் சித்தர் ஸ்ரீவிஸ்வசிராஸினி ஒரு நாளுக்கு 20 மணி நேரம் ஜெபதவத்தில் ஈடுபட்டு வருகிறார்.இங்கே சென்று சிவமந்திரம் ஜபித்து வர,ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.

14.கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் வெள்ளியங்கிரி மலை ஏராளமான சித்த ரகசியங்களை தன்னுள் வைத்திருக்கிறது.தகுந்த குருவின் துணையோடு தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து சிவமந்திரம் ஜபிக்க,வெகு விரைவாகவே ஸ்ரீகாகபுஜண்டரின் ஆசி கிட்டும்.

15.சீர்காழி சட்டநாதர் திருக்கோவிலில் அஷ்டபைரவர்கள் வாழ்ந்து வருகிறார்.இங்கே இன்னமும் சூட்சுமமாக ஸ்ரீகாகபுஜண்டர் தவம் செய்து வருகிறார்.

16.நாகநாத சித்தரும்,அவரது சீடர் யோகி குமரகுருவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாகபுஜண்டர் சித்தர் ஆலயத்தை கொழும்பில் கட்டியுள்ளனர்.தற்போது திரு.குமரகுரு என்பவரின் குடும்பம் அந்தக் கோயிலை நிர்வகித்துவருகிறது.

இலங்கையில் இருக்கும் ஸ்ரீகாகபுஜண்டர் சித்தரின் கோயில்அவர் இலங்கையில் தவம் இருந்ததை ஊர்ஜிதம் செய்கிறது.